Friday, December 01, 2017

ஐயப்பன் பிரம்மச்சாரியா?! இல்லை குடும்பஸ்தனா?!

கடந்தவராம் ஐயப்பனின் நான்கு பருவங்களில் குழந்தை பருவ வடிவமான பாலசாஸ்தாவாக வீற்றிருக்கும் குளத்துப்புழாவில் அருளும் தர்ம சாஸ்தா கோவிலைப்பற்றி  பார்த்தோம். இனி,  திருமணக்கோலத்தில் இருக்கும் அச்சன்கோவில் தர்மசாஸ்தா ஐயப்பனை  பற்றி பார்க்கலாம்.   ஐயப்பனை பிரம்மச்சர்ய கடவுளாதான் நமக்கு தெரியும். அதனால், பத்து வயதுக்குட்பட்ட பெண்குழந்தைகள் மற்றும் மாதவிடாய் சுழற்சி முடிந்த ஐம்பது வயதிற்கு மேற்பட்ட பெண்கள்தான் ஐயப்பனை கோவிலில் தரிசிக்கனும்ன்னு விதிமுறைகள் இருக்கு, ஆனா, வீட்டைவிட்டு வெளில தங்கி இருக்கும் பசங்க, ஆன்சைட்டுக்கு வெளிநாட்டுக்கு போற பசங்க வீட்டுக்கு தெரியாம கல்யாணம் செஞ்சு குடும்பம் நடத்துற மாதிரி ஐயப்பன், அச்சன்கோவிலில் தம்பதி சமேதராய் காட்சி தர்றார்.  அதும் ஒன்றல்ல, இரண்டு மனைவியரோடு... ஐயப்பன் தம்பதி சமேதராய் இருக்கார்ன்னு சொன்னா என்னை லூசுன்னு கேலிப்பேசுவீங்க. ஆனா, அதான் உண்மை. அந்த உண்மை என்னன்னு தெரிஞ்சுக்கலாம். வாங்க..

பரம்பொருளின் மகனான ஐயப்பன் வழிபாடு தோன்றி  சுமார் 2000  ஆகிட்டுது.  சாஸ்தா வழிபாடு என்பது பாரத தேசத்தில் மிகத் தொன்மையான ஒன்று. தென்னகத்தில், குறிப்பாக தமிழகத்திலும் மலையாள தேசத்திலும் இவ்வழிபாடு பரவலா காணப்படுது. ஹரிஹரபுத்திரன் என்று புராணங்கள் குறிப்பிடும் இந்த பரம்பொருள், ஒரு தெய்வீக லீலையின் காரணமாக "மணிகண்டன்" என்ற பெயருடன் பூமியில் தோன்றி, பாண்டிய மன்னனால் கண்டெடுக்கப்பட்டு, வளர்க்கப்பட்டு, பாண்டிமாதேவியின் தலைவலிக்காக புலிப்பால் கொண்டுவர காட்டுக்குச் சென்று, மஹிஷி எனும் அரக்கியை வதைத்து, புலிக்கூட்டங்கள் புடைச்சூழ அரண்மனைக்கு திரும்பி, இறுதியாக சபரிமலை எனுமிடத்தில் யோகபீடத்தில் அமர்ந்து இன்றும் நம்பினோரை கைவிடாமல் அருள்புரிகின்றார் என்பது நமக்கு தெரிந்த புராணக்கதை. ஆனா, நமக்கு தெரியாத சில செவிவழி கதைகளும் இருக்கு. 

ஒருமுறை அச்சன்கோவில் அழகனை காண்பதற்காக தள்ளாத வயதுடைய பக்தர் ஒருவர் தனியா வந்துக்கிட்டிருந்தார். அடர்ந்த காடு, இரவு நேரம்,  வழியும் சரியாக தெரியலை. மனதில் அச்சம் புகுந்தது. அச்சன்கோவில் அரசனுக்கு, அந்த வயதானவரின் அச்சம் புலப்பட்டுவிட்டது. இதற்கிடையே அந்த வயதானவரும்        ஐயப்பனை நினைத்து பயத்தைப் போக்க வேண்டிக் கொண்டார். அப்போது ஒரு அசரீரி கேட்டது. அன்பனே! இப்போது இவ்விடத்தில் வாள் ஒன்று தோன்றும். அந்த வாள் உனக்கு வழிகாட்டும். அச்சன்கோவில் அடைந்ததும் அந்த வாளை எனது சன்னிதியில் கொடுத்து விடு. அதுவரை யாரிடமும் எதுவும் பேசக்கூடாதுஎன்றது அந்த அசரீரி. அதன்படியே அங்கு தோன்றிய வாள் பவுர்ணமியை காட்டிலும் அதிக ஒளி காட்டியது. அந்த ஒளியின் மூலமாக காட்டுப்பாதையில் அந்த நள்ளிரவில் நடந்து வந்து கோவிலை அடைந்தார் முதியவர்.

மறுநாள் விடிந்ததும், அந்த வாளை கோவிலில் ஒப்படைத்து விட்டு நடந்தவற்றை விளக்கி கூறினார். அப்போது கருவறையில் இருந்து அசரீரி ஒலித்தது. அன்பர்களே! அந்த வாளை எனது கருவறையில் வைத்து பூஜை செய்யுங்கள். என்றும் உங்களுக்கு அரணாக இருந்து காப்பேன்என்றது. அதன்படி அந்த வாள் மூலவர் சன்னிதியில் வைக்கப்பட்டது. தற்போது அச்சன் கோவில் அழகனின் திருவாபரணங்கள் வைக்கப்பட்டுள்ள புனலூர் கருவூலத்தில் அந்த வாள் வைக்கப்பட்டுள்ளது.கொடி மரத்தை வணங்கி படியேறி மூலவர் ஐயப்பனை தரிசித்து விட்டு விநாயகர், சுப்பிரமணியர், நாகங்கள், மாம்பழத்தறா பகவதி அம்மன் சன்னிதிகளுக்கும் சென்று வணங்க வேண்டும். பின்னர் கருப்பன் என்னும் கருப்ப சுவாமியையும் தவறாமல் வழிபட வேண்டும். கருப்பந்துள்ளல்என்னும் விழா இங்கு பிரபலம். ஏவல், பில்லி, சூனியம் மற்றும் மாந்திரீகம் போன்றவற்றாலோ, தீராத கொடு நோயாலோ அவதிப்படுபவர்கள், இந்த விழாவில் பங்கேற்றால் அனைத்து துயரங்களும் நீங்கப்பெறுவார்கள். இந்த விழாவின்போது பலரும் கருப்ப சுவாமி போல் வேடம்அணிந்து கலந்து கொள்கிறார்கள். இத்தலத்தில் உள்ள அம்மன் சன்னிதியில் வளையல் மற்றும் பட்டுத் துணிகளுடன் தொட்டில் கட்டி வழிபட்டால் குழந்தை பாக்கியம் நிச்சயம். மேலும் அச்சன் கோவில் ஐயப்பனை வழிபட்டால் நம்மையும் அரசனைப் போல வாழவைப்பான்.

 தமிழகத்தில் நெல்லை மாவட்டத்திற்கு அருகில் அமைந்துள்ள கேரள மலைப்பகுதி. ஐயப்ப பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் அரசனாக ஐயப்பன் இங்குதான் வீற்றிருக்கிறார்.  இக்கோவிலில் பூர்ண, புஷ்கலாவுடன் ஐயன் காட்சியளிக்கிறார்.  பரசுராமர் பிரதிஷ்டை செய்த நான்கு கோவில்களில் இங்கு மட்டுமே அவர் பிரதிஷ்டை செய்த விக்கிரகம் உள்ளது. மற்ற தலங்களில் சேதமுற்று பின்னர் தனியாக உருவாக்கபட்டது. சபரிமலையைப் போல இங்கும் பதினெட்டு படிகள் உண்டு. இக்கோவிலின் சிறப்பு  ஒரு தங்க வாள். இது காந்தமலையிலிருந்து தேவர்களால் வழங்கப்பட்டதாக நம்பப்படுகிறது. அதற்கு அடையாளமாக அந்த வாளில் காந்தமலை என்ற எழுத்துகள் உண்டு. இந்த வாளின் சிறப்பு அம்சம் என்னவெனில் இதன் எடை எவ்வளவு என்று இதுவரை யாரும் கண்டறியமுடியாத விஷயம் என்பதுதான். இந்த வாள் தற்போது புனலூரில் அரசுக் கருவூலத்தில் வைத்துப் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அங்கு வைத்து எடை போட்டால் ஒரு எடையும் அச்சன்கோவிலில் வைத்து எடை போட்டால் ஒரு எடையும் காட்டுமாம். இதன் எடை, இடத்திற்கு இடம் வேறுபடுகிறது.

சபரிமலை போன்ற அடர்ந்த காட்டுக்குள்,  தன் தேவியரான பூரணை, புஷ்கலை உடன் வீற்றிருந்து அருளும் இடம்தான் அச்சன்கோவில். இங்கு ஆண்களுடன் அனைத்து வயதுப் பெண்களும் ஐயப்பனை தரிசிக்க அனுமதி உண்டு. அச்சன்கோவிலில் தனது தேவியருடன் வீற்றிருக்கும் ஐயப்பன் சங்கரன் கோவில் சங்கர நாராயணரைப் பார்த்த வண்ணம் உள்ளார். சபரிமலையில் பால்ய பருவத்தில் காட்சி தரும் ஐயப்பன், குளத்துப்புழாவில் குழந்தைப் பருவத்திலும், ஆரியங்காவில் இளைமைப் பருவத்திலும், அச்சன்கோவிலில் முதிர்ச்சிப் பருவத்திலும் காட்சி தருகிறார். அச்சன் கோவிலின் அரசனாக ஐயப்பன் தனித் தோரணையுடன் மிடுக்காக அமர்ந்துள்ளார். வலது கரம் அருகில் கூர்மையான வாள் ஒன்றும் உள்ளது. ஐயப்பனின் இருபுறமும் அவரது தேவியர் பூரணையும், புஷ்கலையும் அமர்ந்திருக்க, ஐயப்பனின் இந்த அழகு வர்ணிப்புக்குள் அடங்காதது.

அச்சன்கோவில் ஐயப்பனை வழிபட்டால் நம்மையும் அரசனைப் போல வாழவைப்பான். அச்சன் கோவிலில் ஆண்டுதோறும் பத்து நாட்கள் நடைபெறும் மண்டல மகோத்சவம்வெகு பிரசித்தம். இவ்விழா தொடங்குவதற்கு முந்தைய நாளன்று திருவாபரணப் பெட்டி ஊர்வலம் நடைபெறும். புனலூர் கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ள ஐயப்பனின் திருவாபரணங்கள் அப்போது எடுத்து வரப்படும். பெட்டிக்குள் நவரத்தின ஆபரணங்கள், தங்க ஆபரணங்கள், வாள் முதலியன இருக்கும். இந்த ஊர்வலம் புனலூர் கிருஷ்ணன் கோவிலில் இருந்து தொடங்கும். பின்னர் தென்மலை, ஆரியங்காவு வழியாக திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வழியாக தென்காசி காசிவிசுவநாதர் கோவிலுக்கு வந்து சேரும். அங்கு திருவாபரண பெட்டிக்கு சிறப்பு பூஜை போடப்படும். பின்னர் அங்கிருந்து ஊர்வலம் பண்பொழி முருகன் கோவில் சென்று, மேக்கரை வழியாக மலைப்பாதையில் முன்னேறி அச்சன்கோவில் சென்றடையும். ஐயப்பனுக்கும், பூரணை, புஷ்கலை தேவியர்களுக்கும் திருவாபரணங்கள் பூட்டிய பின்னரே மகோத்சவம் தொடங்கும். அச்சன்கோவில் ஐயப்பன், பரசுராமரால் நிர்மாணிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. இத்தல ஐயப்பனை கல்யாண சாஸ்தாஎன்றும் அழைக்கிறார்கள்.  இது விஷம் தீண்டாப்பதி என்ற சிறப்பு கொண்டது. பாம்புக் கடிபட்டு வருபவர்களுக்கு, எந்த நடு இரவானாலும், கோவில் நடை திறந்து சந்தனமும், தீர்த்தமும் வழங்கும் வழக்கம் இந்த ஆலயத்தில் உள்ளதாம்.

ஆண்டுதோறும் தை மாதம், ரேவதி நட்சத்திர தினத்தன்று நடைபெறும் மகாபுஷ்பாஞ்சலி [பூச்சொரிதல்] மிகவும் பிரசித்தி பெற்றது. அதற்காகத் தமிழகத்தில் இருந்து இரண்டு லாரி மலர்கள் கொண்டு வரப்பட்டு ஐயப்பனுக்கும் அம்பாள்களுக்கும் விசேஷ புஷ்பாபிஷேக வைபவம் நடைபெறும். வண்ண வண்ண மலர்க் குவியல்களுக்கு இடையே பகவானைக் காண்பது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையில் இருந்து 30 கிலோமீட்டர் தூரத்தில், கேரளா மாநிலத்தின் வனப்பகுதியில் அமைந்துள்ளது அச்சன்கோவில் திருத்தலம். இந்த ஆலயத்திற்குச் செல்வதற்கு செங்கோட்டையில் இருந்து பஸ் வசதிகள் உள்ளன. 

மண்டல மகோத்சவம்

அச்சன்கோவிலில் ஆண்டுதோறும் பத்து நாட்கள் நடைபெறும் மண்டல மகோத்சவம்வெகு பிரசித்தம். இவ்விழா தொடங்குவதற்கு முந்தைய நாளன்று திருவாபரணப் பெட்டி ஊர்வலம் நடைபெறும். புனலூர் கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ள ஐயப்பனின் திருவாபரணங்கள் அப்போது எடுத்து வரப்படும். பெட்டிக்குள் நவரத்தின ஆபரணங்கள், தங்க ஆபரணங்கள், வாள் முதலியன இருக்கும். இந்த ஊர்வலம் புனலூர் கிருஷ்ணன் கோவிலில் இருந்து தொடங்கும். பின்னர் தென்மலை, ஆரியங்காவு வழியாக திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வழியாக தென்காசி காசிவிசுவநாதர் கோவிலுக்கு வந்து சேரும். அங்கு திருவாபரண பெட்டிக்கு சிறப்பு பூஜை போடப்படும். பின்னர் அங்கிருந்து ஊர்வலம் பண்பொழி முருகன் கோவில் சென்று, மேக்கரை வழியாக மலைப்பாதையில் முன்னேறி அச்சன்கோவில் சென்றடையும். ஐயப்பனுக்கும், பூரணை, புஷ்கலை தேவியர்களுக்கும் திருவாபரணங்கள் பூட்டிய பின்னரே மகோத்சவம் தொடங்கும்.
(பத்ம தளம்) ராஜ வம்சம் கி.பி. 904 -ல் உருவானது. மதுரையில் நிலைக்கொண்ட பாண்டிய அரசர்கள், சோழர்கள் மற்றும் பல எதிரிகளின் தாக்குதல்களால் சிதறுண்டு, அதில் ஒரு பகுதி, தங்கள் ராஜ்ய விசுவாசிகள் வலுவாக இருந்த தென்பாண்டி - கேரள எல்லைகளில் குடியேறினார்கள். செங்கோட்டை, இலத்தூர், பூஞ்சார், பந்தளம் ஆகிய இடங்களில் பாண்டிய ராஜ வம்சம் குடியேறியது. தங்கள் பாண்டிய வம்ச திலகமாக விளங்கிய சபரிமலை சாஸ்தாவையே அண்டி ஒரு கிளை உருவானது. பத்து பகுதிகளை உள்ளடக்கிய ராஜ்ஜியமாக அது விளங்கியதால், பத்து தாமரை இதழ்களை உருவகித்து, பத்ம தளம் என்ற பெயர் அதற்கு விளங்கியது. இதுவே பின்னாளில் பந்தளம் என்றானது. சபரிமலை சாஸ்தாவைப் போற்றி உருவான பாண்டிய ராஜ பரம்பரை நாளடைவில் பந்தள ராஜ வம்சம் என்றே அறியலாயிற்று.


பத்தாம் நூற்றாண்டு சமயத்தில் தென் தமிழக கேரளப் பகுதிகளில் குழப்பமான சூழ்நிலையே விளங்கியது. சபரிமலை, அச்சன்கோவில் பகுதிகளே அன்றைய தமிழக - கேரள எல்லைப்பகுதியாகவும்,வியாபாரிகள் செல்லும் முக்கியமான வழியாகவும் இருந்தது. ஆனால் அங்கிருந்த மக்களெல்லாம் உதயணன் என்றொரு கொள்ளையனுக்கு பயந்து வாழவேண்டிய நிலை உருவானது. எல்லைப்பகுதிகளைக் கடக்கும் மக்களை தாக்கி கொலை கொள்ளைகளை சர்வசாதாரணமாக நடத்தி வந்தான் உதயணன். அவனுக்கென ஒரு கொள்ளைக் கூட்டமும் உருவானது. தமிழக எல்லையில் தொடங்கிய அவனது கொட்டம், மெல்ல மெல்ல கேரளத்துக்குள் புகுந்து, தலைப்பாறை, இஞ்சிப்பாறை, கரிமலை என பந்தளத்தின் காடுகளில் கோட்டையை கட்டிக் கொண்டு காட்டரசனாக வாழுமளவுக்கு முன்னேறியது.
சபரிமலை தர்மசாஸ்தா கோவில் - அப்போது தமிழக - கேரள பக்தர்கள் இருசாராரும் வந்து வழிபடும் கோவிலாகவும், வியாபாரிகள் தமிழகத்திலிருந்து கேரளம் செல்லும் பாதையாகவும் விளங்கியது. வெற்றி போதை தலைக்கேறிய உதயணன், சபரிமலையிலும் தன் வெறியாட்டத்தை நடத்தி கோவிலைக் கொள்ளையிட்டான். அதனை தடுக்க வந்த நம்பூதிரியையும் கொன்று, சாஸ்தா விக்ரஹத்தையும் உடைத்து நொறுக்குகிறான். வெறி தலைக்கேற, கோவிலையும் தீக்கிரையாக்குகிறான். இந்த சமயத்தில் அங்கே இல்லாமல் வெளியே போயிருந்த அந்த பூஜாரியின் மகன் ஜயந்தன் நம்பூதிரி அங்கே திரும்பி வருவதற்குள் எல்லாம் முடிந்து விடுகிறது. இந்த கொடூர சம்பவங்களைக் கண்டு கொதித்த ஜயந்தன், உதயணனை பழிவாங்கவும், மீண்டும் சபரிமலைக் கோவிலை உருவாக்கவும் சபதம் மேற்கொண்டான்.
தன் சபதத்தை நிறைவேற்ற போர்க்கலைகளை வெறியுடன் கற்றறிந்தான் ஜயந்தன். சுற்றியுள்ள பல சிற்றரசர்களையும், ஜமீந்தார்களையும் கண்டு உதயணனின் கொட்டத்தை அடக்க படைகளை கொடுத்து உதவுமாறு வேண்டினான். ஆனால் உதயணனுக்கு பயந்து யாரும் அவனுக்கு உதவ முன்வரவில்லை. இதனால் மனமுடைந்த ஜயந்தன், யாராலும் எளிதில் அடைய முடியாத, பொன்னம்பல மேடு பகுதியில் ஒரு குகையில் வசிக்கலானான்.மனிதர்கள் கைவிட்டு விட்ட நிலையில் தன் முயற்சிக்கு உதவ வேண்டி சாஸ்தாவை நோக்கி தவமிருந்தான். சபரிமலை கோவிலையே தரைமட்டம் ஆக்கிவிட்டதனால் தலைகால் புரியாத உதயணன், தன்னைத் தானே ஒரு அரசன் என்று கருதிக் கொண்டான். ஒரு முறை பந்தளம் பகுதிக்கு வந்த அவன், அந்நாட்டின் இளவரசியைக் கண்டான்; இளவரசியை மணந்து கொண்டால், வெறும் கொள்ளைக்கூட்டத் தலைவனான தான், அரச பரம்பரையில் இணையலாம் என்ற எண்ணத்தில் இளவரசியை பெண் கேட்டு ஆள் அனுப்பினான். ஆனால் பந்தள மன்னர் அதனை கௌரவமாக மறுத்து விட்டார். இதனால் அவமானமுற்ற உதயணன், அரண்மனையைத் தாக்கி, இளவரசியையும் கடத்திக் கொண்டு சென்று விட்டான். அவளை கரிமலையில் உள்ள தன் கோட்டையில் சிறை வைத்து, ஒரு மாதத்துக்குள் மனத்தை மாற்றிக் கொள்ளும்படி கெடுவைக்கிறான். இந்நிலையில், சிறைபட்டிருந்த இளவரசியின் கனவில் தர்மசாஸ்தா தோன்றி, கவலைப்பட வேண்டாம் என்று அறிவுறுத்துகிறார். அதேசமயம் பொன்னம்பல மேட்டில் தங்கியிருந்த ஜயந்தனின் கனவிலும் தோன்றி, இளவரசியைக் காப்பாறுமாறும், அதன் பின்னர் தனது சக்தியே அவனுக்கு மகனாக தோன்றி அவன் லட்சியத்தை நிறைவேற்றும் என்றும் கூறுகிறார்.

இந்த கொள்ளைக் கூட்டம் அசந்திருந்த நேரம் பார்த்து திடீரென தாக்குகிறான் ஜயந்தன். போர்க்கலையில் வல்லவனான ஜயந்தன் எளிதில் இளவரசியை காப்பாற்றிக் கூட்டிச் செல்கிறான். ஆனால் 21 நாட்கள் காணாமல் போன ஒரு பெண்ணை, இறந்தவளாகக் கருதி அரண்மனையில் இறுதி சடங்குகளை முடித்து விடுகிறார்கள். வேறு வழியில்லாத ஜயந்தன், தானே அவளை மணந்து கொண்டு, யாராலும் அடையாளம் காண முடியாத காட்டுப் பகுதியில்(இன்றைய பொன்னம்பலமேடு) வசிக்கிறார்கள். கடும் தவமும், த்யானமும் கொண்ட தம்பதிகளின் மனதில் எப்போதும் ஒரே எண்ணம்தான். உதயணனை அழித்து, சபரிமலைக் கோவிலை மீண்டும் உண்டாக்கும்படியான ஒரு மகனை அளிக்கும்படி தர்மசாஸ்தாவை வேண்டியபடியே இருந்தார்கள்.

விரைவில் இளவரசி கருவுற்றாள். அவர்களுக்கு ஒரு ஆண்குழந்தை பிறந்தது. சபரிமலை ஐயப்பனின் அருளால் பிறந்த குழந்தை என்பதனால், அக்குழந்தைக்கு "ஆர்யன்" என்ற பெயர் சூட்டினார்கள். (ஆர்யன் என்பது சாஸ்தாவின் நான்கு முக்கியமான பெயர்களில் ஒன்று; மரியாதைக்குரியவன் என்று பொருள்). தன் லட்சியத்தை நிறைவேற்றப்போகும் தவப்புதல்வன் என்ற எண்ணத்தில் ஜயந்தன், மிகச்சிறிய வயதிலேயே தன் மகனுக்கு ஆன்மீகம், அரசியலோடு, போர்க்கலைகளையும் கற்றுக் கொடுத்தான். ஆச்சர்யப்படும் விதத்தில், பாலகனான அச்சிறுவன் ஆன்மீக அறிவில் அபரிமிதமான ஞானத்துடனும், அதே சமயம் சண்டைப்பயிற்சியில் வெல்ல முடியாத வீரனாகவும் விளங்கினான். ஆர்யன் ஒரு சாமான்ய பிறவியல்ல என்பதை அவன் தாய் தந்தையர் வெகு விரைவில் உணர்ந்து கொண்டார்கள்.

இனியும் அவனை இந்த காட்டில் வைத்திருப்பது சரியாகாது என்று முடுவெடுத்த ஜயந்தன், பந்தள மன்னனுக்கு ஒரு கடிதம் எழுதி, ஆர்யனை அரண்மனைக்கு அனுப்பி வைத்தான். ஆர்யனின் மாமனான பந்தள மன்னன், கடிதத்தில் வாயிலாக எல்லா உண்மைகளையும் அறிந்தான். இறந்துவிட்டதாக கருதிய தன் சகோதரி இன்னும் உயிருடன் இருப்பதையும், அவள் பிள்ளை கண்முன் வந்திருப்பதையும்கண்டு பெருமகிழ்ச்சி கொண்டான். ஆர்யனின் தோற்றப் பொலிவே அபாரமாக இருந்தது; யாருக்கும் அவன் சிறுவன் என்ற எண்ணமே தோன்றவில்லை. மாறாக மரியாதையே ஏற்பட்டது. அரண்மனையிலேயே தங்கிய ஆர்யன், அரண்மனை வீரர்களையும் மல்லர்களையும் சர்வசாதாரணமாக வென்றது மன்னரிடத்தில் பெரும் மகிழ்ச்சியை உண்டாக்கியது. தன் படையின் முக்கியமான தலைமைப் பொறுப்பினை ஆர்யனுக்குக் கொடுத்தான் மன்னன்.
அரண்மனையின் வளர்ந்து வந்த ஆர்யன், தன் செயற்கரிய செயல்களால் அனைவர் மனத்தையும் வென்று விட்டான். அரசனும், தனக்கு பிறகு பந்தள நாட்டை ஆளும் தகுதி ஆர்யனுக்கே உள்ளது என முடிவு செய்து, அவனையே இளவரசனாக அடையாளம் காட்டினான். அரச பிரதிநிதியாக நாட்டை ஆளும் பொறுப்பையும் அனைத்து அதிகாரங்களையும் ஆர்யனுக்கே அளித்தான். அத்துடன் அரச அதிகாரம் கொண்டவன் என்ற முறையில் "கேரள வர்மன்" என்ற அரச பட்டத்தையும் அளித்து, "ஆர்ய கேரள வர்மன்" என்று போற்றினான். மக்கள் அனைவருக்கும் எளியனாக விளங்கிய ஆர்யனை, எல்லோரும் ஐயன் - ஐயப்பன் என்றே செல்லமாகவும், மரியாதையாகவும் அழைத்தார்கள். (இது ஏற்கனவே சபரிமலையில் உள்ள தர்மசாஸ்தாவின் மற்றொரு பெயர்தான். அந்த காலகட்டத்தில் ஐயப்பன் என்பது ஒரு செல்லப்பெயர்) அரசாட்சியில் முழுமையாக ஈடுபட்டு நாட்டை செம்மை படுத்திய ஐயப்பன், அவ்வப்போது சபரிமலைக் காட்டுக்குத் தனிமையை நாடிச் சென்று, தன் பிறவியின் லட்சியத்தை எண்ணி தியானம் செய்து பொழுதை கழிக்கலானார்.
பாண்டிய அரச பரம்பரையின் மற்றொரு கிளை வம்சமான பூஞ்சாறு ராஜ்ய வம்சத்து அரசனான மானவிக்ரம பாண்டியன், வண்டிப்பெரியாறு வனப்பகுதிக்கு வந்த போது, உதயணனின் படை மானவிக்ரமனைச் சூழ்ந்து கொண்டது. தன்னால் ஆனமட்டும் போராடிய மானவிக்ரமன், ஒரு கட்டத்தில் ஏதும் செய்ய முடியாமல், மீனாட்சியம்மனை வேண்டி நின்றான். வெகு விரைவிலேயே, அவன் வேண்டுதல் பலித்ததைப் போல ஒரு இளைஞர் யானை மேல் வந்து கொண்டிருந்தார். வனத்தில் திரிந்து கொண்டிருந்த காட்டானை ஒன்றை அடக்கி அதன் மேல் வந்து கொண்டிருந்தது -  ஐயப்பன் தான். தன் அநாயாசமான போர் திறமையால் கொள்ளையர்களை விரட்டியடித்த ஐயப்பன், மானவிக்ரமனை காப்பாற்றினார். மீண்டும் தைரியமாக அரண்மனைக்கு செல்லும்படி கூறிய ஐயப்பன், அரசனுக்கு துணையாக, தன் ப்ரதிநிதியாக ஒரு பிரம்பு- வடியை கொடுத்து அனுப்பினார்.  (இன்றும் பூஞ்சாறு ராஜ வம்சம் இதனை ஒரு பொக்கிஷமாக காப்பாற்றுகிறார்கள்)

இப்படியாக பதினான்கு வயதுக்குள் ஐயப்பன் தான் ஒரு போர்வீரனாகவும், யோகியாகவும் விளங்கி தான் சாதாரணமான மனிதனல்ல என்று உணர்த்திவிட்டார். எனவே தன் பிறவி லட்சியத்தை நிறைவேற்ற வேளை வந்துவிட்டதை உணர்ந்தார். உதயணனை அழிக்கவும், சபரிமலை கோவிலை மீண்டும் உருவாக்கவும் - பந்தளத்தின் படைபலம் போதாது; எனவே பெரும் படை ஒன்றை உருவாக்கத் திட்டமிட்டார் ஐயப்பன். நாட்டின் குடிமக்கள் அனைவரும் வீட்டிற்கு ஒருவரை போருக்கு அனுப்ப அறைகூவல் விடுத்தார். இதற்காக அண்டை நாடுகளுக்கும் சென்று ஐயப்பன் படை திரட்ட முடிவு செய்தார். காயங்குளம், அம்பலப்புழை, சேர்த்தலை, ஆலங்காடு போன்ற கேரளப் பகுதிகளுக்கு மட்டுமல்லாமல், தமிழகத்தின் பாண்டிய நாட்டின் உதவியையும் வேண்டி ஐயப்பன் பயணம் செய்ய திட்டமிட்டார்.
முதன் முதலில் ஐயப்பன் காயங்குளம் அரண்மனைக்கு சென்றார். காயங்குளம் அரசர், தான் தினம் தினம் கேள்விப்படும் தெய்வப்பிறவியை நேரில் கண்ட மகிழ்ச்சியில் மெய்மறந்து நின்றார். தன்னால் இயன்ற எல்லா உதவிகளையும் செய்வதாக வாக்களித்தார் மன்னர். காயங்குளம் ராஜ்யத்திலிருந்த பல களரி வீரர்களையும், போர் வீரர்களையும் கொண்டு ஐயப்பன் ஒரு போர்ப்படையை தயாராக்கினார்.ஐயப்பன் காயங்குளத்திலிருந்து கிளம்புமுன்பே ஒரு தூதன் வந்து, கடல் கொள்ளையனான வாவர் என்பவனின் தொல்லைகளைப் பற்றி எடுத்துரைத்தான். இதனைக் கேட்டு மகிழ்ந்த ஐயப்பன், உற்சாகமாக போருக்கு கிளம்பினார். முல்லசேரி என்ற குடும்பத்தின் தலைவனாக விளங்கிய கார்னவர்(தலைவர்), காயங்குளத்தின் மந்திரியாகவும் விளங்கிய அவர் ஐயப்பனுக்கு துணையாக புறப்பட்டர். நடந்த சண்டையில் வாவரை வென்றார் ஐயப்பன். வாவரின் உடலை மட்டுமல்லாமல் உள்ளத்தையும் வென்றது ஐயப்பனின் பண்பு. வாவரை நல்வழிப்படுத்தி தன் சீடனாகவும், தோழனாகவும் ஏற்ற ஐயப்பன், வெகு விரைவில் படைகளை திரட்டலானார்.

புல்லுக்குளங்கரா என்ற இடத்தில் தன் முதல் போர்ப்படை கூட்டத்தை கூட்டி, படை வீரர்களிடையே சொற்பொழிவாற்றினார். (இந்த இடமும் இன்னும் இருக்கிறது). இதே போல அம்பலப்புழை சேர்த்தலை போன்ற ஊர்களிலும் படைகலை திரட்டினார். நாட்டில் எங்கெங்கு சிறந்த வீரர்கள் இருக்கிறார்களோ, அவர்களெல்லாம் ஐயப்பனுக்கு கட்டுப்பட்டு வந்தார்கள். மலைகளில் புகுந்து தாக்குவதில் வல்லவனான கடுத்தன் என்ற வீரனிடம்  ஐயப்பனின் பார்வை பட்டது. பலமுறை உதயணனைத் தாக்கி, சிறைபட்ட பல மன்னர்களை மீட்டுள்ள கடுத்தனை தன் லட்சியத்துக்கு துணையாக அழைத்தார் ஐயப்பன். அதே போல வில் வித்தையில் சிறந்து விளங்கிய ராமன் - க்ருஷ்ணன் என்ற இருவரும் (தலைப்பாறை வில்லன் - மல்லன்) ஐயப்பனுக்கு துணை நின்றார்கள்.

சேர்த்தலை எனும் ஊருக்கு வந்த ஐயப்பன், அங்கே களரி எனும் யுத்தப்பயிற்சி தந்த சிறப்பன்சிறா மூப்பன் என்பவரை சந்தித்து அவரது ஆதரவையும் பெற்றார். மூப்பனின் மகள், கட்டிளம் காளையான ஐயப்பன் மேல் காதல் கொண்டாள். இதனை அறிந்த ஐயப்பன் அவளிடம் தன் வாழ்கை லட்சியத்தை எடுத்துரைத்து அவள் மனதை மாற்றினார். யோகியான ஐயப்பனின் அறிவுரை அவளை ஆன்மீக ரீதியாக பக்குவப்படுத்தியது. இதற்கிடையில் ஐயப்பனின் படைபலம் பெருகிக்கொண்டே வந்தது.உதயணனுக்கு எதிராக, ஐயப்பன் தன் படைகள் முழுவதையும் எருமேலியை நோக்கி திரட்டினார். எருமேலியிலிருந்து வாவரின்  தலைமையில் முதல் தாக்குதல் துவங்கியது. ஆனால் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த உதயணன் மூப்பனின் பெண்ணை தந்திரமாக கடத்திக் கொன்றுவிட்டான். உடனடியாக தன் படைகள் முழுவதையும் திரட்டிய ஐயப்பன், படைவீரர்கள் அனைவருக்கும் எருமேலி முதல் சபர்மலை வரையிலான மலைகளின் மகத்துவத்தை உரைத்தார். முறையான விரத அனுஷ்டானம் இல்லாமல் சாஸ்தாவின் பூங்காவனத்துக்குள் செல்லக் கூடாது என கட்டளையிட்டார்.

ஐயப்பனின் கட்டளைப்படி படைவீரர்கள் அனைவரும் 56 நாட்கள் கடுமையான விரதம் மேற்கொண்டார்கள். இதன் பின்னர் அனைவரும் மீண்டும் எருமேலியில் கூடினார்கள். தங்கள் வெற்றிக்காக கிராத சாஸ்தாவை வழிபட்ட ஐயப்பன், போர்ப்படைகளை வழிநடத்தலானார். தாக்குதல் குறித்து யாருக்கும் சந்தேகம் வராமல் இருக்க, காட்டுவாசிகளைப் போல வேடமிட்டு யாவரும் செல்லலானார்கள். (இன்றைய பேட்டை துள்ளல்; அன்று கடைசியாக வந்த ஆலக்காட்டு படையின் நினைவாக இன்றும் ஆலங்காட்டு பேட்டை துள்ளலே கடைசி பேட்டை துள்ளல்) உதயணனைத் தாக்கும் முன்பு போர்ப்படைகளை மூன்றாக பிரித்தார் ஐயப்பன்.


ஆலக்காட்டு படைகளை வாவரின் தலைமையிலும், அம்பலப்புழை படைகளை கடுத்தனின் தலைமையிலும், பந்தளப்படைகளை வில்லன் - மல்லன் இருவரின் தலைமையிலும் அணிவகுத்தார். மூன்று படைகளுக்கும் தலைமைப் பொறுப்பை ஐயப்பன் தானே ஏற்றார். உதயணனின் இருப்பிடத்தை கிழக்கு, வடக்கு தெற்கு என மூன்று பக்கங்களிலிருந்தும் வளைக்கலானார்கள். லட்சியம் வென்றது.  எருமேலியிலிருந்து பூங்காவனத்துக்குள் நுழைந்தது முதலாகவே ஐயப்பன் முற்றிலும் வேறொரு நபராக காட்சியளித்தார். அவரது தோற்றமே மிகப் பொலிவுடன் காணப்பட்டது; முகத்தில் ஒரு மெல்லிய புன்னகை தவழ  மிக அமைதியான கோலத்துடன், அதே சமயம் ஆனந்தக் கோலத்துடன் முன்னேறினார். ஐயப்பன் ஒரு ஆயுதத்தையும் கையால் கூட தொடவில்லை; அவர் முன்னேற முன்னேற அவரைத் தொடர்ந்து சென்ற படைகளும் எதிரிகளை எளிதாக வீழ்த்தி வெற்றிகளைக் குவித்த வண்ணம் முன்னேறியது.  உதயணனின் கொள்ளைப்படைகளின் கூடாரமாக இருந்த இஞ்சிப்பாறை, கரிமலை, உடும்பாறை ஆகியவை வெகுவிரைவிலேயே ஐயப்பன் படையின் வசமானது. ஐயப்பனின் வீராவேசமான படைகளுக்கு முன் உதயணனின் படைகளால் நிற்கவே முடியவில்லை. ஐயப்பனின் படை வெகு வேகமாக முன்னேறி உதயணனின் படைகளை தவிடுபொடியாக்கியது. இறுதியாக கரிமலைக் கோட்டையில் தஞ்சம் புகுந்தான் உதயணன். கடுமையானதொரு யுத்தத்துக்குப் பிறகு கடுத்தன் ஆக்ரோஷமாக முன்னேறி உதயணனின் கழுத்தை வெட்டி வீழ்த்தினான். ஐயப்பனின் லட்சியம் நிறைவேறியது.


பல்லாண்டுகால போராட்டத்தின் வெற்றிக்குப்பிறகு படைகள் முழுவதும் ஆனந்தமாக பம்பையாற்றங்கரையில் கூடினார்கள். ஐயப்பன் அங்கு, போரில் இறந்த அனைவருக்கும் இறுதிச்சடங்குகள் செய்து தர்ப்பணம் செய்யச் சொன்னார். எதிரியே ஆனாலும், உதயணனின் ஆட்களுக்கும் தர்ப்பணம் செய்யப்பட்டது. மேற்கொண்டு படைகள் அனைவரும் நீலிமலையைக் கடந்து செல்லத்துவங்கினார்கள். அப்போது அனைவரையும் நிறுத்திய ஐயப்பன், ஆலயப்பகுதிக்குள் ஆயுதங்களை எடுத்துச் செல்லக் கூடாது எனக்கூறி, அம்பு, கத்தி, கதை என எல்லா ஆயுதங்களையும் ஓர் ஆலமரத்தின் கீழே வைத்துவிடச் சொன்னார். (பண்டைய சரங்குத்தி ஆல்)  வீர விளையாட்டின் முடிவுபின்னர் ஐயப்பனும் மற்ற படை வீரர்களும் சபரிமலை கோவிலுக்குச் சென்றார்கள். அங்கே அவரது தந்தை ஜயந்தனும் மற்றவர்களும் புதிய விக்ரஹத்துடன் காத்திருந்தார்கள். சபரிமலையை அடைந்ததும் ஐயப்பன் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பூரண மௌனத்தில் ஆழ்ந்திருந்தார். ஆலய நிர்மாணம் முடிந்து ப்ரதிஷ்டைக்கு தயாராகும் வரை ஐயப்பன் ஓரிடத்தில் அமர்ந்து த்யானத்தில் ஆழ்ந்திருந்தார்(இன்றைய மணிமண்டபம்) தனுர்மாதம் (கார்த்திகை) முடிந்து தைமாதம் துவங்கும் வேளையில் புதிய விக்ரஹம் ப்ரதிஷ்டை செய்ய வேளை குறிக்கப்பட்டது. புதிய ப்ரதிஷ்டையை ஐயப்பன் தானே தன் கையால் நடத்தினார்.  பக்தர்கள் பரவசத்துடன் இதனை தரிசித்துக் கொண்டிருக்கும் வேளையில், பொன்னம்பல மேட்டில் ஓர் ஒளி தோன்றியது. மறு கணம், ஆலயத்துள்  ஆர்ய கேரள வர்மனைக் காணவில்லை. இத்தனை நாள் தங்களுடன் இருந்த தங்கள் அன்புள்ள, பாசமுள்ள, கருணையுள்ள இளவரசன்  -ஆர்யன் ஐயப்பன்- சாக்ஷாத் அந்த ஐயப்பனே ! என்று உணர்ந்து மெய்மறந்து சரண கோஷம் செய்தார்கள். பந்தளம் ராஜ வம்சம், பூஞ்சார் அரண்மனை, மற்ற பல குடும்பங்கள் இன்றும் இந்த வரலாற்றுக்கு சான்றாக இருக்கிறார்கள். பல பொருட்களும், இடங்களும், பாடல்களும் இன்னும் கண்முன் இருக்கத்தான் செய்கிறது.

ஐயப்பன் பிரம்மச்சாரியா?! இல்லையா?! அவருக்கு ரெண்டு மனைவிகள் வந்ததெப்படின்னு இன்னொரு பதிவில் பார்க்கலாம்.. ஏன்னா.. இப்பவே பதிவு நீண்ண்ண்ண்ண்டு போனது. 

தமிழ்மணம் ஓட்டுப்பட்டை

நன்றியுடன்,
ராஜி.

17 comments:

  1. அம்மாடி... எம்புட்டு நீள பதிவு!

    சாமியே சரணம் ஐயப்பா..

    ReplyDelete
    Replies
    1. இனி குறைச்சுக்குறேன் சகோ

      Delete
  2. சாமியே சரணம் ஐயப்பா ...

    ReplyDelete
  3. Replies
    1. எவ்வளவ் பெரிய பதிவுக்கு எவ்வளவு சின்ன கருத்துரை!

      Delete
  4. எவ்வளவு பெரிய பதிவு ஐயனைப்பற்றி நல்லது

    ReplyDelete
  5. சுவாமியே சரணம் ஐயப்பா....


    மிக அருமையான தகவல்கள் அக்கா...ஆன ரொம்ப நீளமா போனதாலே ஆழ்ந்து படிக்க முடியல...

    ReplyDelete
  6. அற்புதமான பதிவு. மிக்க நன்றி !!!

    ReplyDelete
  7. அர்த்துங்கல் வெளுத்தச்சன் மற்றும் சுவாமி ஐயப்பன்

    17 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் பந்தளத்தின் பாண்டிய இளவரசன் அய்யப்பன் தலைமையில் பல்வேறு இனங்கள் மற்றும் மதங்களைச் சேர்ந்த மக்கள் ஒன்றிணைந்து நாயக்கர் படையைத் தோற்கடித்தனர். மதுரை திருமலை நாயக்கர் கி.பி.1623ல் மறவர் தலைவனும் கொள்ளைக்காரனுமான உதயணன் தலைமையில் ஒரு கொள்ளைப் படையை அனுப்பினார். உதயணனும் அவனது படையும் 17 வருடப் போராட்டத்திற்குப் பிறகு தோற்கடிக்கப்பட்டு கொல்லப்பட்டனர்.

    அர்த்துங்கல் தேவாலயம்

    செயின்ட் ஆண்ட்ரூ பேராலயம், அர்த்துங்கல் அரபிக்கடலை நோக்கிய கடற்கரையோரத்தில் கேரளாவின் சேர்த்தலையில் உள்ள அர்த்துங்கலில் அமைந்துள்ளது. அர்த்துங்கல் தேவாலயம் பதினாறாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் போர்த்துகீசியர் காலத்தில் கட்டப்பட்டது. இது 1584 இல் விகார் ஜாகோமோ ஃபெனிசியோ என்ற இத்தாலிய ஜேசுயிட் பாதிரியாரால் மீண்டும் கட்டப்பட்டது. பக்தர்கள் இவரை "அர்த்துங்கல் வெளுத்தச்சன்" என்று அழைத்தனர். திருத்தந்தை. ஜியாகோமோ ஃபெனிசியோ (கி.பி. 1558 - கி.பி. 1632), லத்தீன் மொழியில் இந்து மதத்தைப் பற்றிய கட்டுரைகள் மற்றும் புத்தகங்களை எழுதுவதற்காக இந்து மதத்தைப் படித்த முதல் ஐரோப்பிய மிஷனரி ஆவார். இந்து கலாச்சாரத்திலும், சீரப்பஞ்சிற பணிக்கர்களிடம் கற்றுக்கொண்ட களரிப்பயற்றிலும் ஆர்வம் கொண்டிருந்தார்.

    அர்த்துங்கல் வெளுத்தச்சன்

    அர்த்துங்கல் வெளுத்தச்சன் அர்த்துங்கல் தேவாலயத்தின் விகாரியாக இருந்தபோது, ​​சேர்த்தலையின் லத்தீன் கத்தோலிக்கர்களும் உதயணனுக்கு எதிரான போரில் இணைந்தனர். அர்த்துங்கல் வெளுத்தச்சன் முகம்மாவிலேயே புகழ்பெற்ற சீரப்பஞ்சிற களரியில் பயிற்சி பெற்றவர் என்றும் புகழ் பெற்றவர். அர்த்துங்கல் வெளுத்தச்சன் மற்றும் அவரது லத்தீன் கத்தோலிக்கர்கள் ஐயப்பனின் ஆதரவாளர்கள் என்று நம்பப்பட்டது. ஆனால் திருமலை நாயக்கர் காலத்தில் நடந்த நிகழ்வுகள் அதாவது கி.பி.1623 முதல் 1659 வரையிலான காலகட்டத்தில், அர்த்துங்கல் வெளுத்தச்சன் மிகவும் வயதானவராக இருந்திருக்கலாம். அர்த்துங்கல் வெளுத்தச்சன் கிபி 1632 இல் காலமானார்.

    கி.பி.1632ல் இறந்த அர்த்துங்கல் வெளுத்தச்சன் வாழ்ந்த காலத்தில் ஐயப்பன் சுவாமி ஒரு இளைஞராக இருந்தார். எனவே உதயணனுடன் ஐயப்பன் செய்த போர் கி.பி.1632 முதல் 1640 வரையிலான காலகட்டத்தில் நடந்திருக்கலாம். நாயக்கர் படையெடுப்பிற்கு பதினேழு ஆண்டுகளுக்குப் பிறகு உதயணன் கொல்லப்பட்டதாக வாய்மொழி மரபுகள் கூறுகின்றன.

    புனித செபாஸ்டியன் சிலை

    கி.பி 1747 இல் புனித செபஸ்தியார் சிலை நிறுவப்பட்ட போது, ​​பல உள்ளூர் பக்தர்கள் சிலையை வெளுத்தச்சன் என்றும் அழைக்கத் தொடங்கினர்.

    ஆலங்காடு யோகம்

    ஐயப்ப ஸ்வாமி ஆலங்காடு தலைவர் ஞாலூர் கர்த்தா, காம்பிள்ளி பணிக்கர் மற்றும் முல்லப்பிள்ளி நாயர் ஆகியோர் முன்னிலையில் அர்த்துங்கல் வெளுத்தாவுடன் ஆலுவாவில் உள்ள பெரியாறு கரையில் ஆலங்காட்டு வீரர்களுக்கு உரையாற்றியதாக புராணங்கள் கூறுகின்றன. எருமேலியில் மலைப்பாங்கான நிலப்பரப்பில் ஏறிச் செல்லும் போது 'சரணம் ஐயப்பா' என்று முதன்முதலில் முழக்கமிட்டவர் காம்பிள்ளி பணிக்கர் ஆவார். முதல் வெளிச்சப்பாடு அல்லது தேவ வாக்கு கூறுபவர் இவரே ஆவார். ஆலுவாவில் உள்ள பாரூர்கவலயிலிருந்து இடதுபுறம் போகும்போது ஆலங்காட்டுக்கு அருகில் உள்ள இடம் காம்பிள்ளி.

    அம்பலப்புழா யோகம்

    அம்பலப்புழா பழமையான பாண்டிய துறைமுக நகரமான புறக்காடு அருகே உள்ளது. பழங்காலத்தில் வேம்பநாட்டுக் காயலுக்கு தெற்கே உள்ள அனைத்து பகுதிகளும் பாண்டிய வம்சத்தின் கீழ் இருந்தன. கி.பி 77 இல் முசிறிக்குச் சென்ற பிளினி, மோதுராவின் மன்னன் பாண்டியோன் ஆட்சி செய்த நகரமான பரேகே-புறக்காட்டில் மிளகு வாங்க உள்ளூர் மக்களால் வற்புறுத்தப்பட்டார்.

    எருமேலியில் வாவர் தலைமை தாங்கிய ஐயப்பன் படையில் சேர்வதற்காக இங்கிருந்து ஒரு பணிக்கர் படை புறப்பட்டது. அந்த நிகழ்வை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் எருமேலியில் அம்பலப்புழா யோகம் பக்தர்களால் பேட்ட துள்ளல் என்ற புனித சடங்கு நடனம் ஆடப்படுகிறது.

    ReplyDelete
  8. அர்த்துங்கல் வெளுத்தச்சன் மற்றும் சுவாமி ஐயப்பன்

    பாண்டியன் வனவாசம்

    திருமலை நாயக்கர் (கி.பி. 1723 முதல் 1759 வரை) ஆட்சிக்கு வந்தபோது, ​​மதுரையிலிருந்து அனைத்து பாண்டிய குடும்பங்களையும் நாடு கடத்தினார் என்று பொதுவாக நம்பப்படுகிறது. சிலர் வேணாட்டில் உள்ள கல்லிடைக்குறிச்சி மற்றும் அம்பாசமுத்திரத்தில் குடியேறினர். ஆனால் பூஞ்சாறு மற்றும் பந்தளம் ஆகிய இடங்களில் குடியேறிய பாண்டியக் குடும்பங்கள் கி.பி 1610 ஆம் ஆண்டிலேயே குடியேறியிருக்கலாம்.

    பாண்டிய இளவரசி மாயாதேவிக்கு பிறந்த அய்யப்பன், 1632 இல் இறந்த அர்த்துங்கல் வெளுத்தச்சன் வாழ்ந்த காலத்தில் இளைஞராக இருந்ததால், பாண்டிய குடியேற்றம் கி.பி 1610 இல் நிகழ்ந்திருக்கலாம்.

    பணிக்கர்கள்

    பணிக்கர்கள் தற்காப்புக் கலைப் பயிற்சியாளர்கள், அவர்கள் போர் வீரர்களுக்குப் பயிற்சி அளித்தனர். ஒவ்வொரு பணிக்கரும் ஒரு சிறிய படையை பராமரித்து, அவர்கள் சேர மற்றும் தொடர்புடைய பாண்டிய வம்சங்களை ஆதரித்தனர். பணிக்கர் என்பவர்கள் தமிழ் வில்லவர் மக்களின் துணைக்குழுக்கள் ஆவர்.

    ஆனால் கி.பி 1310 இல் மாலிக் காஃபூரின் படையெடுப்பிற்குப் பிறகு, மற்றும் பாண்டிய வம்சத்தின் தோல்விக்குப் பிறகு கி.பி 1335 இல் கேரளாவில் துளு தாய்வழி அரசுகள் நிறுவப்பட்டன. அதன் பிறகு சாமந்த க்ஷத்திரியர்கள், துளு பிராமண நம்பூதிரிகள் மற்றும் நாயர்களால் கேரளா ஆட்சி செய்யப்பட்டது. இக்காலத்தில் பல பணிக்கர்களும் கேரளாவை விட்டு வெளியேறினர். சிலர் இலங்கை சென்றனர். சிலர் ஈழவர்களுடனும், மற்றவர்கள் போர்த்துகீசிய இராணுவத்துடனும் பின்னர் சிரியன் கிறிஸ்தவர்களுடனும் இணைந்தனர்.

    சீரப்பஞ்சிற பணிக்கர்கள்

    சேர்த்தலையில் உள்ள முகம்மாவில், சீரப்பஞ்சிற களரி அமைந்திருந்தது. சீரப்பஞ்சிற பணிக்கர்கள் ஈழவர்களுடன் இணைந்திருந்தார்கள். இந்த சீரப்பஞ்சிற களரியில் ஜேசுயிட் பாதிரியார் அருட்தந்தை ஜாகோமோ ஃபெனிசியோ, என்ற அர்த்துங்கல் வெளுத்தச்சன் களரிப்பயற்றில் பயிற்சி பெற்றார். சீரப்பஞ்சிற களரியில் இருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில் அர்த்துங்கல் தேவாலயம் இருந்தது. அய்யப்பன் சீரப்பஞ்சிற களரியில் தற்காப்பு கலை பயிற்சி பெற்றவர்.
    அடுத்த சீரப்பஞ்சிற பணிக்கரின் மகள் லளிதா பிற்காலத்தில் மாளிகப்புறத்தம்மா என்று அழைக்கப்பட்டார்.

    பாண்டிய பிரதேசங்கள்

    17 ஆம் நூற்றாண்டில், மத்திய கேரளா தாய்வழி துளு ஆட்சியாளர்களால் ஆளப்பட்டாலும், ஆலங்காடு, அம்பலப்புழா மற்றும் பெரியாற்றின் கரையோரம் இருந்த பல பணிக்கர்களும் பந்தளத்தின் பாண்டியர்களுக்கு விசுவாசமாக இருந்தனர். மத்திய கேரளாவில் பாண்டியர்களின் பிரதேசங்கள் பந்தளம், மாவேலிக்கரை மற்றும் காஞ்சிரப்பள்ளி பகுதி ஆகும். மேலும் இந்த பாண்டிய பிரதேசம் பாண்டியன் பதிவுகளில் கேரளசிங்க வளநாடு என்று அழைக்கப்பட்டது.

    கேரளாவில் பாண்டியரின் குறுநாடுகள்
    1. மாறநாடு கொல்லம்
    2. பந்தளம்
    3. அம்பலபுழா-புறக்காடு
    4. நிரணம்-கோட்டயம்
    5. ஆலங்காடு

    நாயக்கர் தாக்குதல்

    திருமலை நாயக்கர் 1623 முதல் 1630 கி.பி.க்கு இடைப்பட்ட காலத்தில் கேரள பாண்டியர்களுக்கு எதிராக மறவப்படையுடன் கொள்ளையனாக இருந்த உதயணன் என்ற மறவ தலைவனை கேரளாவிற்கு அனுப்பினார். மூணாறு அருகே கரிமலையில் உதயணன் கோட்டை கட்டினான். உதயணன் அருகில் இருந்த இடங்களில் கொள்ளையடிக்க ஆரம்பித்தான். உதயணன் பாண்டிய இளவரசி மாயாதேவியைக் கடத்தினான் ஆனால் அவள் மீட்கப்பட்டாள். ஆனால் பல வருடங்களுக்குப் பிறகுதான் உதயணன் தோற்கடிக்கப்பட்டு கொல்லப்பட்டான்.

    நாயக்கர் படையெடுப்பு பற்றிய அச்சம் உதயணனுக்கு எதிராக பலதரப்பட்ட மக்கள் ஒன்றிணைவதற்கு வழிவகுத்தது.

    பாண்டியன் இளவரசியின் மீட்பு

    பாண்டிய மன்னர் சீரப்பஞ்சிற பணிக்கர் உதவியுடன் தன் சகோதரியை மீட்டு சீரப்பஞ்சிற தறவாடு வீட்டில் தங்க அனுப்பினார். பாண்டிய இளவரசி சீரப்பஞ்சிற பணிக்கரின் மருமகனை மணந்திருந்தார் என்பது ஒரு பார்வை. அவர்களுக்குப் பிறந்த மகன்தான் ஐயப்பன்.
    பணிக்கர் களரியாக இருந்த ஆலங்காடு யோகம், ஐயப்பனின் தந்தையின் இடமான பித்ருஸ்தானமாகவும் கருதப்படுகிறது. சீரப்பஞ்சிற பணிக்கரின் சகோதரியின் கணவர் ஆலங்காடு பணிக்கர் குடும்பத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம்.

    பொதுவாக பணிக்கர் வில்லவர் வம்சங்களுக்கு சேவை செய்த தற்காப்பு பிரபுக்கள் மற்றும் ஒப்பீட்டளவில் குறைந்த அந்தஸ்தால் இளவரசிகளை அவர்கள் திருமணம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. ஆனால் பதினேழாம் நூற்றாண்டில் பாண்டிய வம்சமே கேரளாவில் தப்பியோடியவர்கள் மற்றும் அவர்கள் பாதுகாப்பிற்காக பணிக்கர் படைகளை நம்பியிருந்தனர்.

    ReplyDelete
  9. அர்த்துங்கல் வெளுத்தச்சன் மற்றும் சுவாமி ஐயப்பன்

    ஒத்திசைவான நம்பிக்கை

    ஆனால் அய்யப்பன் மிகவும் இளமையாக இருந்த அந்த சகாப்தத்தில், ஐயப்பனும் புனித செபஸ்தியாரும் சகோதரர்கள் என்று மக்கள் நம்பத் தொடங்கினர்.

    செபஸ்தியார் ஒரு ரோமானிய அதிகாரி, அவர் கிறித்துவ மதத்தைத் தழுவினார், அவர் பிரிட்டோரியன் காவலர்களின்  கேப்டனாக இருந்தார், அவர் ரோமானிய பேரரசர் டியோக்லெஷியனை (கி.பி. 284 முதல் 305 வரை) கேலி செய்து அவமானப்படுத்தினார். இது புனித செபஸ்தியார் மீது அம்புகளை எய்து மரணதண்டனை நிறைவேற்ற வழிவகுத்தது. புனித செபஸ்தியார் அனைத்து கத்தோலிக்கர்களுக்கும் பிரபலமான புனிதர் ஆனார்.

    அர்த்துங்கல் தேவாலயத்தில் மிலனில் செதுக்கப்பட்ட புனித செபஸ்தியாரின் சிலை கி.பி 1647 இல் நிறுவப்பட்டது.

    போர்த்துகீசிய சகாப்தத்தில் ஜேசுயிட் பாதிரியார்கள் உள்ளூர் இந்து மற்றும் திராவிட பழக்க வழக்கங்களை நிராகரிக்கவில்லை. கிறிஸ்தவ தேவாலயங்களிலும் வெண்கலக் கொடிக் கம்பங்கள் இருந்தன, அதில் கொடிகள் ஏற்றப்பட்டன. புனித செபாஸ்டியன் தேவாலயங்களில் இன்றும் வருடாந்திர திருவிழாவின் போது தேவாலயத்தின் மீது இரண்டு வெள்ளை பருந்துகள் பறக்கும் தோற்றத்திற்காக பலர் காத்திருக்கிறார்கள். இது கேரள கிறிஸ்தவர்களால் பின்பற்றப்படும் ஒரு இந்து வழக்கம் ஆகும்.

    ஐயப்பன் பக்தர்கள்

    பல ஐயப்பன் பக்தர்கள் ஒவ்வொரு ஆண்டும் புனித யாத்திரையின் ஒரு பகுதியாக அர்த்துங்கல் பசிலிக்காவிற்கு வருகை தருகின்றனர். அய்யப்பன் புனித செபஸ்தியாருடன் மிகவும் நட்பாக பழகியதே இதற்குக் காரணம். அவர்கள் மிகவும் நெருக்கமாக இருந்ததால் அவர்கள் சகோதரர்களாக கருதப்பட்டனர்.1647 ஆம் ஆண்டு அர்த்துங்கல் தேவாலயத்தில் பளிங்கு கல் செபஸ்தியார் சிலை நிறுவப்பட்டது. எனவே புனித செபஸ்தியாரோடுள்ள சுவாமி ஐயப்பனின் நட்பு அந்த காலத்திலேயே தொடங்கியிருக்கலாம்.

    சுவாமி அய்யப்பன் கி.பி 1647 இல் அர்த்துங்கல் தேவாலயத்தில் உள்ள புனித செபஸ்தியார் சிலையை பார்வையிட்டிருக்கலாம். இந்த நிகழ்வு சுவாமி ஐயப்பனும் புனித செபஸ்தியாரும் சகோதரர்கள் என்ற புராணத்தை உருவாக்கியிருக்கலாம். அர்த்துங்கல் லத்தீன் கத்தோலிக்கர்கள் அய்யப்பனின் வலுவான ஆதரவாளர்களாக இருந்தனர்.

    அர்த்துங்கல் தேவாலயத்தில் சபரிமலை பக்தர்கள் வழிபாடு செய்கின்றனர். அவர்கள் யாத்ரீகர்களின் கழுத்தில் அணிந்திருக்கும் முத்ரா என்ற புனித சங்கிலி மாலையை அகற்றுகிறார்கள். தேவாலயத்திற்கு அருகில் உள்ள இரண்டு குளங்களில் ஒன்றில் பக்தர்கள் புனித நீராடுகின்றனர்.

    மத நல்லிணக்கம்

    அய்யப்பனால் நிறுவப்பட்ட மத மற்றும் இன நல்லிணக்கத்தால் அர்த்துங்கல் தேவாலயத்திலும் வாவர் பள்ளியிலும் பக்தர்கள் வழிபட முடிந்தது. மலை அரையர், பணிக்கர், லத்தீன் கத்தோலிக்கர்கள் மற்றும் முஸ்லிம்கள் அனைவரும் ஐயப்பனை ஆதரித்து மரியாதையுடன் நடத்தப்பட்டனர்.

    அசல் பந்தளம் தமிழ் வில்லவர் பாண்டிய வம்சம் 1700 களின் பிற்பகுதியில் முடிவுக்கு வந்திருக்கலாம். அதன் பிறகு பந்தளம் பாண்டியன் பிரதேசம் ராஜா என்ற பட்டத்துடன் பாண்டியர்களாக வேடமணிந்த பார்கவ குலத்தைச் சேர்ந்த நம்பூதிரிகளின் குடும்பத்தால் கைப்பற்றப்பட்டது.

    பூஞ்சார் பாண்டிய வம்சம்

    1700களில் குருவாயூர் அருகே உள்ள வெங்கிடங்குவில் இருந்து தமிழ் பூஞ்சார் பாண்டியன் வம்சத்திற்குப் பதிலாக சார்க்கரா கோவிலகம் என்ற துளு பிராமண போற்றி குடும்பம் வந்தது. பாண்டிமண்டலம் உடைய குலசேகரப் பெருமாள் என்ற திருநாமத்துடன் துளு பிராமண வம்சத்தினர் பூஞ்சாரை ஆண்டனர்.

    பிராமண பந்தளம் மற்றும் பூஞ்சார் வம்சங்கள் இரண்டும் தாய்வழி வம்சாவளியைக் கடைப்பிடித்தன.

    அசல் பாண்டியர்கள் திராவிட தமிழ் வில்லவர் வம்சத்தைச் சேர்ந்தவர்கள், அவர்கள் வில்லவர், வானவர், மலையர் மற்றும் மீனவர் குலங்களால் ஆதரிக்கப்பட்டனர்.

    பாண்டிய வம்சத்திற்குப் பின் வந்த ஆரிய நம்பூதிரி பாண்டியர்கள் அஹிச்சத்திரத்திலிருந்து குடிபெயர்ந்த நேபாள வேர்களைக் கொண்ட துளு பிராமணர்கள் ஆவர்.

    பத்தொன்பதாம் நூற்றாண்டிலிருந்து நம்பூதிரி பாண்டியர்கள் காலத்தில் சீரப்பஞ்சிற பணிக்கர்களும் மலை அரையர்களும் சபரிமலை கோயிலில் தங்களின் முதன்மையான இடத்தை இழந்தனர். பக்தர்கள் இனம், மதம், பாலினம் மற்றும் வயது அடிப்படையில் பாகுபாடு காட்டப்பட்டனர்.

    ReplyDelete
  10. அர்த்துங்கல் வெளுத்தச்சன் மற்றும் சுவாமி ஐயப்பன்

    வாவர் பள்ளி

    அய்யப்பனின் நெருங்கிய நண்பரான வாவர் பாத்தும்மா - செய்தாலி தம்பதியரின் மகன். கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள எருமேலி நைனார் ஜும்மா மசூதிக்கு ஐயப்ப பக்தர்கள் வருகை தருவது வழக்கம். இந்த பள்ளிவாசல் வாவரின் மசூதியாக கருதப்படுகிறது. அவர்கள் மசூதியின் தொழுகை மண்டபத்திற்குள் நுழையாமல் மசூதியையும், ஓய்வெடுப்பதற்குரிய இடத்தையும் சுற்றி வருகின்றனர். இங்கு பக்தர்கள் தேங்காய் உடைத்து வழிபாடு செய்யவும், காணிக்கை, பிரசாதம் வழங்கவும் அனுமதிக்கப்படுகின்றனர்.

    சபரிமலையில் வாவர்நடை என்று அழைக்கப்படும் மற்றொரு வழிபாட்டுத்தலம் உள்ளது, அங்கு வாவர் சிலை இல்லை, ஆனால் செதுக்கப்பட்ட கருங்கல் பலகை மற்றும் ஒரு பழைய வாள் மட்டுமே உள்ளன. வாவர் ஒரு முஸ்லிமாக இருந்ததால் ஒரு முஸ்லிம் மதகுரு தினசரி தொழுகை நடத்துகிறார். இங்கும் ஐயப்ப பக்தர்கள் பிரார்த்தனை செய்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் சந்தனக்கூடம் திருவிழா பேட்டத்துள்ளல் எனப்படும் சடங்கு நடனத்தின் முன்னோடியாக நடத்தப்படுகிறது. எருமேலி நைனார் ஜும்மா மஸ்ஜித் 1970 களில் கோபாலகிருஷ்ணன் என்ற இந்து கட்டிடக் கலைஞரால் மீண்டும் கட்டப்பட்டது.

    மணிகண்டன்

    மணிகண்டன் மலை அரையர் குலத்தைச் சேர்ந்தவர். கரிமலை அரையன் கந்தன் மற்றும் அவரது மனைவி கருத்தம்மா ஆகியோரின் மகன் மணிகண்டன் என்று மலை அரையர்கள் கூறுகின்றனர். மணிகண்டன் பாண்டிய மன்னன் 1610 களில் கொள்ளையர்களிடமிருந்து வந்தபோது அவரைப் பாதுகாத்தார். மணிகண்டன் பாண்டிய இளவரசி மாயாவதியை உதயணனிடம் இருந்து மீட்டார். மலை அரையர்கள் மணிகண்டனுக்கு சன்னதி அமைத்து வழிபட்டனர். பிற்காலத்தில் அய்யப்பன் மணிகண்டனின் அவதாரமாகக் கருதப்பட்டு, மலை அரையர்களால் வழிபடப்பட்டார்.

    கி.பி 1623 வாக்கில் பல்வேறு இனத்தவர்களின் உதவியோடு உதயணனை மணிகண்டன் தோற்கடித்தார். மணிகண்டன் தலைமையிலான படைகள் பாண்டிப்படை, ஆலங்காட்டுப்படை, அம்பலபுழப்படை, சீரப்பஞ்சிறப்படை, மல்லன், வில்லன், வலியக்கடுத்தா, கொச்சுகடிதா, வாவர், நஸ்ரானிகள், அர்த்துங்கல் வெளுத்தச்சன் என்ற ஜாகோமோ ஃபெனிசியோ என்ற ஒரு இத்தாலிய ஜெசுயிட் பாதிரியார் போன்றவர்கள்.

    வலிய கடுத்த ஸ்வாமி

    அய்யப்பனின் உதவியாளரான வலிய கடுத்த ஸ்வாமிக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு சிறிய சன்னதி புனித படிகளின் இடது பக்கத்திற்கு அருகில் அமைந்துள்ளது. வலிய கடுத்தா ஒரு மலை அரையர் பழங்குடித் தலைவர் ஆவார், அவர் நாயக்கர் இராணுவத்திற்கு எதிராக மலை அரையர் படைகளை வழிநடத்தினார்.

    மலை அரையர்

    மலை அரையர், சேர வம்சத்தை ஆதரித்த மூன்று பெரிய வில்லவர் பழங்குடியினரில் ஒன்றான மலையர் குலத்துடன் தொடர்புடையவராக இருக்கலாம். ஐயப்பனின் முக்கிய ஆதரவாளர்களாக இருந்த மலை அரையர் 1904 ஆம் ஆண்டு வரை ஐயப்பன் கோவிலின் பூசாரிகளாகவும் உரிமையாளராகவும் இருந்தனர். இருபதாம் நூற்றாண்டு வரை ஒத்திசைவான நம்பிக்கை மற்றும் மத சகிப்புத்தன்மை நிலைத்திருப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.

    1800களில் பந்தளம் நம்பூதிரி பாண்டிய மன்னர்களால் மலை அரையர்கள் தங்கள் நிலங்களில் இருந்து வெளியேற்றப்பட்டனர். சபரிமலை மற்றும் சபரிமலையைச் சுற்றியுள்ள பதினேழு மலைகளிலிருந்து மலை அரையர்கள் வெளியேற்றப்பட்டனர்.

    மலை அரையர்கள் கூலியின்றி ஏலக்காயை மலைகளில் இருந்து சமவெளிக்கு கொண்டு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டனர். கி.பி 1856 இல் மலை அரையர்கள் நாயர் அரசாங்க அதிகாரிகளுக்கு எதிராக கிளர்ச்சி செய்து தாக்கினர்.

    மலை அரையர்களின் கிறிஸ்துவ மதமாற்றம்

    மலை அரையர்களை துன்புறுத்தியது பத்தொன்பதாம் நூற்றாண்டில் அவர்கள் கிறிஸ்தவ மதத்திற்கு மாற வழிவகுத்தது. மலை அரையர்களில் பாதி பேர் கிறிஸ்துவ மதத்திற்கு மாறினார்கள். ஸிஎம்எஸ் மிஷனரி தந்தை ஹென்றி பேக்கர் 1840 முதல் 1862 வரை அவர்களிடையே பணியாற்றினார். தந்தை.ஹென்றி பேக்கர், ஹில் அரியன்ஸ் ஆஃப் திருவாங்கூர் என்ற புத்தகத்தை எழுதினார்.1879 இல் மலை அரையர்களில் சுமார் 2000 கிறிஸ்தவர்கள் இருந்தனர்.

    திராவிடப் பாணி வழிபாடு

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் கி.பி.1904 வரை திராவிட வழிபாட்டு முறைகளை மலை அரையர் பூசாரிகள் நடத்தி வந்தனர். அவர்களின் முக்கிய வழிபாடு தேன் மற்றும் நெய் கொண்டு அபிஷேகம். சமீப காலம் வரை மலை அரையர்களின் "தேனாபிஷேகம்" வழிபாடு அனுமதிக்கப்பட்டது. சில தசாப்தங்களுக்கு முன், தந்திரிகள் இந்த வழிபாட்டை நிறுத்தினர்.

    ReplyDelete
  11. அர்த்துங்கல் வெளுத்தச்சன் மற்றும் சுவாமி ஐயப்பன்

    1904ல் கட்டப்பட்ட புதிய சபரிமலை கோவில்

    சபரிமலை கோயில் போளச்சிறக்கல் கொச்சும்மன் முதலாளி என்ற கிறிஸ்தவ கட்டிட ஒப்பந்ததாரரால் கட்டப்பட்டது. மலை அரையர்களின் கட்டுப்பாட்டில் இருந்த சபரிமலை கோவில் கி.பி.1900ல் மர்மமான முறையில் தீயில் எரிந்து நாசமானது.
    சபரிமலை கோவிலை புனரமைப்பதற்கான ஒப்பந்தத்தை திருவிதாங்கூர் அரசரிடம் இருந்து கொச்சும்மன் முதலாளி கி.பி.1900ல் பெற்றார்.
    கி.பி.1904ல் கொல்லத்தில் கட்டுமானப் பணி தொடங்கியது. அஷ்டமுடிக் காயல் கரையில் மரம் மற்றும் கல் பாகங்களைக் கொண்டு கோயில் அமைக்கப்பட்டு, பின்னர் சபரிமலைக்கு மாற்றப்பட்டது. கொச்சும்மன் முதலாலி 1907 இல் இறந்தாலும், சிரியன் ஆர்த்தடாக்ஸ் பாதிரியாராக இருந்த அவரது மருமகன் ஸ்கரியா கத்தனார் சபரிமலை கோயிலின் கட்டுமானப் பணிகளை முடித்தார்.

    தாழமண் மடம் தந்திரி குடும்பம்

    1904 ஆம் ஆண்டு திருவிதாங்கூர் மன்னர் ஆந்திராவிலிருந்து வந்த தெலுங்கு பிராமணர்களின் ஒரு குடும்பத்தை அர்ச்சகர்களாக நியமித்தார், அவர்கள் செங்கன்னூரில் குடியேறினர். தாழமண் மடம் தந்திரி குடும்பம் என்று அழைக்கப்படும் இந்த குடும்பம் கி.பி 1904 முதல் சபரிமலையில் அர்ச்சகராக இருக்க பரம்பரை உரிமை பெற்றுள்ளது.
    சுதந்திரத்திற்குப் பிறகும் சபரிமலையில் தந்திரிகளாக வேறு எந்த அர்ச்சகர் குடும்பமும் அனுமதிக்கப்படவில்லை.

    பிராமண மேலாதிக்கம்

    இந்தக் காலகட்டத்திற்குப் பிறகு மலை அரையர்கள் ஓரங்கட்டப்பட்டனர். சீரப்பஞ்சிற பணிக்கர்கள் புறக்கணிக்கப்பட்டனர். சபரிமலை கோயில் முற்றிலும் நம்பூதிரி பாண்டியர்கள் மற்றும் தெலுங்கு பிராமணர்களாகிய தாழமண் மடம் தந்திரி குடும்பத்தின் கீழ் வந்தது. சபரிமலை கோவிலின் தந்திரி பதவி கி.மு 100ல் பரசுராம மகரிஷியில் இருந்து தங்களுக்கு கிடைத்ததாக தாழமண் மடம் தந்திரிகள் இப்போது கூறுகிறார்கள்.

    அதாவது ஐயப்பன் பிறப்பதற்கு 1700 ஆண்டுகளுக்கு முன்பே தாழமண் தந்திரிகள் சபரிமலை கோவிலின் பூசாரிகளாக இருந்தனர் என்பதாகும்.

    பாண்டிய வம்சத்தின் திராவிட வேர்கள்

    அசல் பாண்டியர்கள் திராவிட தமிழ் வில்லவர் ஆட்சியாளர்கள். வில்லவர் மன்னர்களை வில்லவர், மலையர், வானவர் மற்றும் மீனவர் குலங்கள் ஆதரித்தன. பணிக்கர்களும் ஏனாதி தளபதிகளும் பாண்டியப் படைகளை வழிநடத்தினர்.

    பாண்டியர்கள் வேடம் போடும் பார்கவகுலத்தைச் சேர்ந்த நம்பூதிரி பாண்டிய வம்சத்தினர் திராவிட வில்லவர்களோ தமிழர்களோ அல்ல. நம்பூதிரி பாண்டியர்கள் இன ரீதியாக பந்தளம் பாண்டிய வம்சத்துடன் தொடர்புடையவர்கள் அல்ல.

    துளு-நேபாளிய படையெடுப்பாளர்கள்

    தமிழ் வில்லவர்கள் வரலாற்றுக்கு முந்தைய காலத்திலிருந்து கேரளா மற்றும் தமிழகத்தை ஆண்ட சேர, சோழ, பாண்டிய வம்சங்களை நிறுவினர். தமிழ் அரசுகளின் எதிரிகளாக இருந்த துளு மன்னர்கள் அரேபியர்கள் மற்றும் துருக்கியர்களுடன் கூட்டு வைத்தனர்.12 ஆம் நூற்றாண்டில் பெரும் கடல் சக்தியாக இருந்த அரேபியர்கள் மலபாரில் ஒரு பெரிய குடியேற்றத்தை நிறுவ விரும்பினர்.

    துளு மன்னர்கள் அஹிச்சத்திரத்தில் இருந்து வேர்களைக் கொண்ட நேபாள நாயர்களின் இராணுவத்தால் பாதுகாக்கப்பட்டனர். நம்பூதிரிகளும் அஹிச்சத்திரத்தில் வேர்களைக் கொண்ட துளு பிராமணர் ஆவர், அவர்கள் கிபி 345 இல் கடம்ப மன்னர் மயூர வர்மாவின் ஆட்சியின் போது கர்நாடகாவிற்கு குடிபெயர்ந்தனர்.

    கி.பி 1120 இல் பாணப்பெருமாள் (பானுவிக்ரம குலசேகரப்பெருமாள்) என்ற துளு படையெடுப்பாளர் அரேபிய ஆதரவுடன் கேரளாவைத் தாக்கினார். பாணப்பெருமாள் 350000 எண்ணிக்கையிலான நாயர் படையுடன் கேரளா மீது படையெடுத்து மலபாரை (காசர்கோடு, கண்ணூர், கோழிக்கோடு மற்றும் மலப்புறம் மாவட்டங்கள்) ஆக்கிரமித்தார், அங்கு அரேபியர்கள் குடியேறினர்.

    கி.பி 1120 துளு படையெடுப்பிற்குப் பிறகு, நேபாள வம்சாவளியைக் கொண்ட நாயர்களும் நம்பூதிரிகளும் வடக்கு கேரளாவில் தோன்றினர். பல நாயர்கள் வெள்ளை நிறத்தைக் கொண்டிருந்தனர், ஆனால் அவர்கள் நேபாள வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்பதால் மஞ்சள் நிறத்தின் சாயையும் மற்றும் சற்று மங்கோலிய முக அம்சங்களுடனும் இருந்தனர். நாயர்களும் நம்பூதிரிகளும் தங்களைச் சவர்ணர் என்று அழைத்தனர். நாயர்களும் நம்பூதிரிகளும் சேர மற்றும் பாண்டிய அரசுகளின் எதிரிகளாக இருந்த துளு-நேபாள மக்கள்.

    ReplyDelete
  12. அர்த்துங்கல் வெளுத்தச்சன் மற்றும் சுவாமி ஐயப்பன்

    மாலிக் காஃபூரின் படையெடுப்பு

    கி.பி 1310 இல் டெல்லி சுல்தானகத்திலிருந்து படையெடுப்பாளராக இருந்த மாலிக் காபூருடனான போரில் பாண்டிய வம்சத்தின் தோல்விக்குப் பிறகு அனைத்து தமிழ் அரசுகளும் முடிவுக்கு வந்தன. வில்லவர்கள் டெல்லி ராணுவத்தால் மொத்தமாக படுகொலை செய்யப்பட்டனர். மலபாரின் துளு படையெடுப்பாளர்கள் அதாவது சாமந்தர், நாயர் மற்றும் நம்பூதிரிகளுக்கு டெல்லி சுல்தானியம் மற்றும் மாலிக் காஃபூர் ஆகியோர் கேரளாவின் ஆதிக்கத்தை அளித்தனர்.

    1335 ஆம் ஆண்டு கேரளா முழுவதும் துளு சாமந்தர்கள் மற்றும் நம்பூதிரிகளால் துளு-நேபாள தாய்வழி அரசுகள் நிறுவப்பட்டன. துளு-நேபாளத் தாய்வழி சவர்ண வம்சங்கள் அரேபியர்கள் மற்றும் துருக்கியர்களால் ஆதரிக்கப்பட்டன.

    முந்தைய பிராமணர்கள்

    பிற்கால சேர வம்ச காலத்தில் (கி.பி. 800 முதல் கி.பி. 1120 வரை) பிராமணர்கள் பட்டர், பட்டாரர், பட்டாரகர், பட்டாரியர், பழாரர், சாத்திரர், நம்பி, உவச்சர் போன்ற பெயர்களால் அறியப்பட்டனர். கி.பி.1335க்கு முந்தைய தமிழ்ப் பதிவுகள் எதிலும் நம்பூதிரிகள் குறிப்பிடப்படவில்லை.

    1310 இல் மாலிக் காஃபூரின் தாக்குதலுக்குப் பிறகு முந்தைய தமிழ் பிராமணர்கள் அனைவரும் மர்மமான முறையில் காணாமல் போனார்கள்.

    பரசுராமர் கேரளாவின் மீது தங்களுக்கு அதிகாரம் அளித்ததாக நம்பூதிரிகள் கூறுகின்றனர். உண்மையில் 1310 ஆம் ஆண்டு துளுவ பிராமண நம்பூதிரிகளுக்கும் துளு சாமந்தர்களுக்கும் மாலிக் காஃபூரால்தான் கேரளாவின் மேலாதிக்கம் வழங்கப்பட்டது.

    வில்லவர்களின் வீழ்ச்சி

    இது கேரளாவில் திராவிட தமிழ் வில்லவர் வம்சங்களான சேர மற்றும் பாண்டிய வம்சங்களை அடக்கப்படுவதற்கு வழிவகுத்தது. பெரும்பாலான திராவிட மலையாளிகள் ஆரிய-நாக படையெடுப்பாளர்களால் அவர்ணர் என்று முத்திரை குத்தப்பட்டனர். நம்பூதிரிகள் துளு-நேபாள பிராமணர்கள், அவர்கள் பாண்டிய வம்சத்தின் பரம எதிரிகளாக இருந்தனர்.

    நம்பூதிரி பாண்டிய வம்சம்

    தற்போதைய பந்தளம் நம்பூதிரி பாண்டியன் வம்சம் ஆரிய பிராமண பார்கவ குலத்தைச் சேர்ந்தது, அவர்கள் உபநயனத்தை நடத்துபவர்கள், சைவ உணவு உண்பவர்கள், தமிழ் ஒருபோதும் பேசாதவர்கள்.

    சபரிமலை கோயிலும் பந்தளம் பாண்டிய ராஜ்ஜியமும் திராவிட வில்லவர் மக்களுக்கு சொந்தமானது ஆனால் அவர்களின் பாரம்பரியம் இப்போது புறக்கணிக்கப்பட்டுள்ளது.

    தீ விபத்து

    1950ல் சபரிமலை கோவிலில் மீண்டும் ஒரு பெரிய தீ விபத்து ஏற்பட்டது. அய்யப்பன் சிலை தீயில் எரிந்து சேதமானது.

    புதிய அய்யப்பன் சிலை

    1936-ல் சென்னை மாகாண முதல்வராக இருந்த சர் பொன்னம்பல தியாக ராஜன் என்கிற பி.டி.ராஜன், பழமையான ஐயப்பன் சிலைக்குப் பதிலாக, தற்போதைய பஞ்சலோக ஐயப்பன் சிலையை சபரிமலை கோயிலுக்கு பரிசாக அளித்தார். ஆனால், சபரிமலை கோவிலுக்கு திராவிடத் தொடர்பை யாரும் விரும்பாததால், இது மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது

    ஐயப்பன் புராணத்தின் காலம்

    சுவாமி ஐயப்பன் புராணத்தின் காலம் 1623 இல் திருமலை நாயக்கரின் படையெடுப்பில் தொடங்கி கி.பி 1647 இல் புனித செபஸ்தியாரின் பளிங்கு சிலை நிறுவப்பட்டதில் முடிவடைகிறது.

    ReplyDelete